ஐஆர்சிடிசியின் வசதிக் கட்டணம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற முடிவு திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் பங்குகள் மீண்டுவந்துள்ளது.
முன்னதாக, முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறையின் செயலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஐஆர்சிடிசியின் வசதிக் கட்டணம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற முடிவு திரும்ப பெறப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வசதிக் கட்டணம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, ஐஆர்சிடிசியின் பங்குகள் சரிவை சந்தித்தன. ஒரே நாளில், ஐஆர்சிடிசியின் பங்கு மும்பை பங்கு சந்தையில் 29 சதவிகிதம் குறைந்து விற்பனையானது. இருப்பினும், அரசிடமிருந்து விளக்கம் வந்ததைத் தொடர்ந்து, ஐஆர்சிடிசியின் பங்கு 39 சதவிகிதம் மீண்டு 906 ரூபாய்க்கு உச்ச தொட்டது.
ரயில்களில் உணவு சேவைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனம் அரசுக்கு சொந்தமான ஐஆர்சிடிசி ஆகும். அதுமட்டுமின்றி, ஐஆர்சிடிசி மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்டை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும்.