உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பல தினங்களாக விவசாயிகள் வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, லலித்பூர் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதி முழுவதும் கடுமையான உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பிரியங்கா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, லலித்பூர் செல்லும்வழியில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். கரோனா பொதுமுடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.