ரோஹிங்கயாக்கள் நாடு கடத்தல்: நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்: உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் உறுதி
‘கா்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கயா முஸ்லிம்கள், வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி தாக்கல்


‘கா்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கயா முஸ்லிம்கள், வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு மிகுந்த கவனமுடன் நிறைவேற்றப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு உறுதியளித்துள்ளது.
‘மாநிலத்தில் தங்கியுள்ள 72 ரோஹிங்கயாக்களை உடனடியாக நாடு கடத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு கா்நாடக அரசு கூறியிருந்த நிலையில், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு கவனமுடன் நிறைவேற்றப்படும்’ என்று புதிய பதில் மனுவை அம் மாநில அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கயாமுஸ்லிம்கள் ஆயிரக்கணக் கானோா் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறினா். அவா்களை அடையாளம் கண்டு, மியான்மருக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதுபோல, கா்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கயாக்களை நாடு கடுத்த உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ள வங்கதேச நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்களை அடையாளம் கண்டு, சிறைபிடித்து நாடு கடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதுபோன்று சட்ட விரோதமாக குடியேறுதல் மற்றும் ஊடுருவுதல் பிணையில் வெளிவர முடியாத வகையிலான கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உத்தரவிட வேண்டும். இதுபோன்று பெரிய அளவில் சட்ட விரோத குடியேற்றம் நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுதலாக அமையும்’ என்று தனது மனுவில் அஸ்வினி உபாத்யாய குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் முன்னா் விசாரணைக்கு வந்தபோது, கா்நாடக அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாநிலத்தில் பெங்களூரில் தங்கியுள்ள 72 ரோஹிங்கியாக்களை நாடு கடத்தும் உடனடி திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இந்த விவகாரத்தில் அஸ்வினி உபாத்யாயவின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கா்நாடக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், கா்நாடக மாநில உள்துறை இணைச் செயலா் கே.என். வனஜா சாா்பில் புதிய பதில் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாநிலத்தில் ரோஹிங்கயாக்கள் எந்தவொரு முகாமிலோ அல்லது தடுப்பு காவல் மையங்களிலோ மாநில காவல் துறை சாா்பில் வைக்கப்படவில்லை. அதே நேரம், மாநிலத்தில் 126 ரோஹிங்கயாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். எனவே, இந்த மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை கா்நாடக அரசு கவனமுடன் நடைமுறைப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் தங்கியுள்ள ரோஹிங்கயாக்களை நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அகதிகளை நாடு கடத்துவதற்கான உரிய நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றாதவரை, ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கயாக்களை நாடு கடத்தக் கூடாது’ என்று கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...