மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க இந்த முறை வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அந்த மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது:
"இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசு செயல்படும்விதம் சரியாக இல்லை. இதை தேர்தல் ஆணையத்திடம் இன்று (செவ்வாய்க்கிழமை) முறையிடுவோம்.
பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற நாங்கள் தயார். நாடாளுமன்றக் குழு வேட்பாளர் பெயரை அறிவிக்கும். மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி ஒருமுறை தோற்கடித்துவிட்டார். இந்த முறை வேறொருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதையும் படிக்க | பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு
திரிணமூலில் இருந்தபோது சுவேந்து மீது வழக்குகள் இல்லை. பாஜகவில் இணைந்தவுடன் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்வதற்கான திட்டமாகத் தெரிகிறது. அதனால்தான் அவருக்கு இடைக்கால காவல் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."
தொடர்ந்து நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணை குறித்து கூறுகையில், "குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். தற்போது நடைமுறை தொடங்கிதான் உள்ளது. இது எல்லா இடங்களிலும் நிகழ்வதுதான். நிறைய குறிப்பிடத்தக்க தலைவர்கள் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு குற்றமற்றவர் என்பதை நிரூபித்துள்ளனர். இதில் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்றார் திலிப் கோஷ்.
மேற்கு வங்கத்தில் பவானிபூர், சம்ஷேர்கஞ்ச், ஜங்கீபூர் தொகுதிகளில் செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் பவானிபூர் தொகுதியில் எதிர்பார்த்ததைப்போல் மம்தா பானர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.