‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் நாள்தோறும் 90,000 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
“இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் நாள்தோறும் 90,000 மருத்துவ ஆலோசனைகள் பெறுகின்றனர். இதுவரை மொத்தம் 1.20 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஆந்திரத்தில் 37.04 லட்சம், கர்நாடகம் 22.57 லட்சம், தமிழகத்தில் 15.62 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.”
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள், மருத்துவா்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலை இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவினி’ ஓபிடி என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சேவையைப் பயன்படுத்த இணையதளம் வாயிலாகவோ அல்லது ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னா், மருத்துவருடன் தொடா்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
மேலும், மருத்துவரின் மருத்துவப் பரிந்துரைச் சீட்டு நோயாளிகளின் செல்லிடப்பேசிக்கு மின்னணு வடிவில் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியாா் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.