/

தமிழ்நாடு தேர்தல்! கிராமங்களை சமநிலை செய்த நகரங்கள்!

தமிழ்நாடு தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் கிராமங்களை சமநிலை செய்துள்ளன நகரங்கள்.

News image

பெண் வாக்காளர்கள். - DPS

Updated On :24 ஏப்ரல் 2026, 10:01 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் பதிவான வாக்குகளின் சதவிகிதம்தான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது.

வழக்கமாக வாக்குப்பதிவுக்கு விடுமுறை கொடுத்தால், சுற்றுலா சென்றுவிடும் மக்கள், இந்த முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் காரணமாக, பாடுபட்டு பட்டியலில் பெயர் சேர்த்திருப்பதாலும், எஸ்ஐஆர் முறையால் வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததாலும் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறதே தவிர, வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை வழக்கம்போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, நகரப் பகுதிகளில் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதைவிட கிராமப் பகுதிகளில்தான் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள். நகரப் பகுதிகளில் வேறு இடங்களுக்கு குடிபெயர்வது அதிகரிப்பது, சோம்பல் என பல்வேறு காரணங்களால் வாக்காளர்கள் சிலர் தங்களது வாக்குகளை செலுத்தத் தவறி விடுவார்கள்.

ஆனால், 2026 தேர்தலில் நகரங்களை கிராமங்கள் சமநிலை செய்திருப்பதாகவேக் கூறப்படுகிறது. சென்னையில் ஒரு சில தொகுதிகளைத் தவிர்த்து, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

2021ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தின் கிராமப் பகுதியான பாலக்கோடு பகுதியில் 87 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மாநிலத்தின் மையப் பகுதியான ஒரு தொகுதியில் வெறும் 59 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. ஆனால், இந்த முறை இந்த விகிதமானது பாலக்கோட்டில் 92.57 சதவிகிதம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 84.34 சதவிகிதம் என பதிவாகியிருக்கிறது. எனவே, கடந்த கால தேர்தல்களைப் போல அல்லாமல் நகரங்களில் இந்த முறை சற்று வாக்குப்பதிவு சதவிகிதம் கூடியிருக்கிறது என்றே தரவுகள் கூறுகின்றன.

கரூர் நகரில் 79 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அங்கு மாநிலத்திலேயே அதிகபட்சமாக 93.40 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 81.13 சதவிகிதம்.

இதுபோல, குமாரபாளையம் நகரப் பகுதிகளில் 93 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் 74.73 சதவிகித வாக்குகள் பதிவாகின. தற்போது கிராமப் பகுதிகளுடன் நகரங்களிலும் வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்திருப்பதையே காட்டுகிறது.

அதேவேளையில், கிராமங்கள், நகரங்கள் என இரண்டிலுமே மிக அதிக வாக்குகள் பதிவாகவில்லை. கணிசமான வாக்குகளே உயர்ந்துள்ளன. இது மிகச் சாதாரணமான தேர்தல்தான் என்கிறார்கள். சதவிகிதங்களை மட்டும் வைத்து சாதனை, வரலாறு காணாத சாதனை என்றெல்லாம் கூற முடியாது என்றும் தரவுகளை அலசினால் சில பகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளதே உண்மை நிலவரம் என்றும் கூறப்படுகிறது.

நகரப் பகுதிகளிலும் ஓரளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் உயர்ந்திருப்பதே ஒட்டுமொத்த தமிழகத்தில் 85 சதவிகிதம் வாக்குப்பதிவானதற்குக் காரணமாகவும் கூறப்படுகிறது.

Summary

Cities have equaled villages in voting percentage in the Tamil Nadu elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.