இடைத்தேர்தலில் நான் வெற்றி பெறவில்லையெனில் வேறு ஒருவர் முதல்வர் ஆவார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை தெரிவித்தார்.
பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி பிரசாரத்தின்போது பேசியது:
"ஒருவேளை நான் வெற்றி பெறாவிட்டால், வேறு யாரேனும் ஒருவர் முதல்வர் ஆவார். என்னை முதல்வராக வைத்துக்கொள்ள எனக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. அதை வீணாக்க வேண்டாம்.
நந்திகிராமில் விவசாயிகள் போராட்டத்துக்காகக் குரல் கொடுத்ததால், என்னை அங்கு போட்டியிடச் சொன்னார்கள். ஆனால், அங்கு நான் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரிய வரும்.
ஆனால், தற்போது நான் இங்கு நிற்கிறேன். இது விதியாகக் கூட இருக்கலாம். என்னால் உங்களை விட முடியாது. நான் வெற்றி பெற்று விடுவேன் என்று எண்ணி உங்களது வாக்குகளை வீணடித்துவிட வேண்டாம். நீங்கள் வாக்களிக்கவில்லையெனில் நான் தோற்கவும் நேரிடும்" என்றார் மம்தா பானர்ஜி.