மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முதல்வரின் வர்ஷா இல்லத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சில அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,183 பேருக்குத் தொற்றும், 249 பலியும் பதிவாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பும், பலியும் அதிகளவில் பதிவாகி வருகின்றது. தற்போது 3,67,897 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கரோனா தொற்று தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், மகாராஷ்டிரத்தில் விரைவில் கரோனா படுக்கைகளுக்குப் பற்றாக்குறை சந்திக்க நேரிடலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவல் குறித்து இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.