நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் பற்றாக்குறையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக உரையாடிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்கிறது. வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டு, நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும், பொதுமக்கள் அதிகளவில் கூடுவதையும், தேர்தல் பிரசாரங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தினார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் சோனியா வலியுறுத்தினார்.