மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தில்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட 20 மாநில அரசுகள் இலவச கரோனா தடுப்பூசியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.