அசாம் மாநிலத்துடனான பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையே எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் நிலவிவருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோருடன் தொலைப்பேசி மூலம் ஆலோசனை மேற்கொண்ட மிசோரம் முதல்வர் சோரம்தங்கா, இரு மாநில பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோரம்தங்கா ட்விட்டர் பக்கத்தில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின்படி, அசாம்-மிசோரம் எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண ஒப்பு கொண்டுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை
கடந்த ஜூலை 26ஆம் தேதி, எல்லை பிரச்னை தொடர்பாக அசாம், மிசோரம் மாநில காவல்துறையினருக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு மாநிலங்களுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிய நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மாநிலத்தின் உயர் காவல்துறை அலுவலர்களுக்கு எதிராக மிசோரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
கோலாசிப் மாவட்ட வைரங்க்டே காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தது குறிப்பிடப்பத்தக்கது.