கர்நாடகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12 வரை வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மாநிலத்தில் கரோனா நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொம்மை, தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநில எல்லையோரங்களில் உள்ள மாவட்டங்களில் வார இறுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரவு நேர ஊரடங்கு 9 மணிக்கு பதில் 10 மணிக்கு தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசவராஜ் பொம்மை தலைமையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறை நிபுணர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர், இதுகுறித்து பேசிய பொம்மை, "கரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வரும் நாள்களில், அகில இந்திய அளவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்புகள் உள்ளன" என்றார்.