நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 10) பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இன்றும் எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்ததால் 15 ஆவது நாளாக இரு அவைகளும் முடங்கின. முன்னதாக இன்று மக்களவையில் எந்த விவாதமுமின்றி மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த ஜூலை 27, ஆகஸ்ட் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து நாளை(ஆக.10) அன்று தில்லியில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.