
தடுப்பூசி போட்டிருந்தால் கடையில் 50% தள்ளுபடி
தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அலங்கார பொருள்கள் விற்பனையக உரிமையாளர் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு, முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை எடுத்துவரும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அலங்காரப் பொருள்கள் கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.
படிக்க | தில்லியில் புதிதாக 38 பேருக்கு கரோனா
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ரக்ஷா பந்தனையொட்டி அதிக அளவிலான மக்கள் ராக்கி கயிறையும், அலங்கார பொருள்களையும், பரிசுகளையும் வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு கரோனா சான்றிதழை சரிபார்த்து சலுகை வழங்கப்படும். கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தால் வியாபாரம் முடங்கியது. இந்த ஆண்டு ஓரளவு நடைபெறும் என்று நம்புகிறோம் என்று கூறினார்.