இரவு நேரம் சென்று பார்வையிடும் வகையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தாஜ் மஹால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக, தாஜ் மஹாலுக்கு இரவு நேரத்தில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தாஜ் மஹால் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் 17ஆம் தேதி, கரோனா ஊரடங்கு காரணமாக தாஜ் மஹால் மூடப்பட்டது.
இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ண்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில், "தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட ஆகஸ்ட் 21,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தாஜ் மஹால் மூடப்படும். ஊரடங்கு என்பதால் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மூடப்படுகிறது
இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.