2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு அவுட்டர் ரிங் சாலையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்றுவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை நீட்டிக்க ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்திற்கு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், "சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர்புரம் வரையிலான அவுட்டர் ரிங் சாலையில் கட்டுமான பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இன்னும் 1.5 முதல் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவுள்ளது.
இச்சாலையில்தான், பல தொழில்நுட்ப பூங்காக்கள், ஐடி நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டுவருகிறது. இதன் காரணமாக, நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவுட்டர் ரிங் சாலை ஆறு வழிச் சாலையாக உள்ளபோதிலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அங்கு தொடர்ந்து இருந்துவருகிறது.
இதையும் படிக்க | உத்தரப் பிரதேசம் : விவசாயிகள் போராட்டத்தால் 40 ரயில்கள் ரத்து
கரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் அவுட்டர் ரிங் சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில், இங்கு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்துவது கடினமாக மாறிவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளது.