புது தில்லி: வணிகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தும் எரிவாயு உருளைக்கான விலையை ரூ.100.50 உயர்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.
இந்த விலை உயர்வானது, இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஏற்ற இறக்கமாக இருந்த உருளையின் விலை கடந்த நான்கு மாதங்களாக தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான்.. உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.100 அளவுக்கு உயர்த்தப்பட்டதால், புது தில்லியில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.2,101 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.2,234.50 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, நவம்பர் 1 ஆம் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.268 உயர்த்தப்பட்டு, முக்கிய நகரங்களில் எரிவாயு உருளைகளின் விலை ரூ.2000ஐ தொட்ட நிலையில், இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது சிறிய உணவக உரிமையாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளான 14.5 கிலோ, 5 கிலோ, 10 கிலோ ஆகியவற்றின் விலைகள் மாற்றமின்றி நீடிக்கின்றன.