முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத்தின் இல்லத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங் நேரில் சென்றார்.
விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயரதிகாரிகள் என 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேவுள்ள காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் முற்பகல் 11.47 மணிக்கு புறப்பட்டுச் சென்றன. இந்த இரு ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து பிற்பகல் 12.20 மணிக்கு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவாணேவிடம் ஹெலிகாப்டர் விபத்து குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில், தில்லியிலுள்ள விபின் ராவத் இல்லத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று வீட்டிற்குச் சென்றார். அங்கு விபின் ராவத்தின் மகள் மட்டுமே வசித்து வருகிறார். அவரை நேரில் சந்தித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், அதில் தந்தை, தாய் பயணித்தது குறித்தும் விவரித்தார்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், விபின் ராவத்தின் உறவினர்கள் தில்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வருகைபுரிந்த வண்ணம் உள்ளனர். இதனால் விபின் ராவத் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாலை விபத்து நடைபெற்ற குன்னூர் பகுதிக்கு விரையவுள்ளார்.