
கோவா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி கோவாவில் பிரசாரம் செய்கிறார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி கோவா செல்கிறார். கோவாவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரியங்கா காந்தி அங்கு காங்கிரஸ் தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.
பயணத்திட்டத்தின்படி, அசோல்னா பகுதிக்குச் செல்லும் அவர், அங்கு தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதையடுத்து குபெம் தாலுகாவில் உள்ள மோர்பிர்லாவில் பழங்குடிப் பெண்களுடன் உரையாடுகிறார். அதன்பின்னர், மார்கோவில் உள்ள எம்சிசி ஹாலில் `அம்செம் மொல்லெம்' மாணவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
கோஸ்டா மைதானத்தில் நடைபெறும் பெண்கள் மாநாட்டிலும் அவர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, சிவசேனை எம்பி சஞ்சய் ரௌத், தில்லியில் பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினார். உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸுடன் கூட்டணி குறித்துப் பேசியதாக சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...