தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றார் ராகுல் காந்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு
நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாபில் தேர்தல் பேரணியில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் திடீரென இத்தாலி சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில், கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இதுகுறித்து, 'ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக இத்தாலி சென்றுள்ளார். பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதுகுறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவும், சுமார் ஒரு மாத காலம் ராகுல் காந்தி வெளிநாடு பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது.