குவகாத்தி: விரைவில் சட்டபேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் அசாம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான விலைகள் குறைகின்றன.
அசாமில் கரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்கம் தீவிரமாக இருந்த காலத்தில், பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக ரூ.5ம், மதுபான விலையில் கலால் வரியை 25 சதவீதம் அதிகரித்தும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு, பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்புகளை திரும்பப் பெறுவதாக அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பேரிடரை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான வகைகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், அதனை தொடர்வது நியாயமாக இருக்காது என்ற அடிப்படையில், அறிவிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் நாட்டிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் அசாம் இடம்பெறும். டீசல் விலையில் ஹரியாணா, இமாச்சலம், உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் அசாம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.