
பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை
பெங்களூரு: பெங்களூரு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கியுள்ளது.
முதல் ரயில் இன்று காலை 4.45 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, 5.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்தது. தினமும் மூன்று ஜோடி ரயில்கள் இவ்விரண்டு தளங்களுக்கும் இடையே இன்று முதல் இயக்கப்படுகிறது.
பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து வெறும் ரூ.10 மற்றும் ரூ.15ல், இனி பொதுமக்கள் விமான நிலையம் சென்றடையலாம். இதுவரை பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து டேக்ஸி அல்லது வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்க பெரிய தொகை செலவிட்டு வந்தவர்களுக்கு இது பெரும் நிம்மதியை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே.. அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
இந்த வழித்தடத்தில் மூன்று ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதில் இரண்டு பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து தேவனஹள்ளி ரயில் நிலையத்துக்கும், ஒன்று ஏலஹன்கா முதல் தேவனஹள்ளி ரயில் நிலையத்துக்கும் இயக்கப்படுகிறது. முதல் ரயில் காலை 4.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. கடைசி ரயில் இரவு 9 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏலஹன்கா ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கும், விமான நிலைய ரயில் நிலையத்திலிருந்து ஏலஹன்காவுக்கு காலை 6.15 மணிக்கும் ரயில்கள் புறப்படும்.
அதேநேரத்தில் ஏற்கனவே கோலார் மற்றும் சிக்பல்லப்பூர் வழியாக இயக்கப்படும் பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் பங்கார்பெட் ரயிலும், மறுமார்க்கத்தில் பங்கார்பெட் முதல் எஸ்வந்த்புருக்கு கோலார் வழியாக இயக்கப்படும் ரயில்களும் இனி பெங்களூரு விமான நிலையத்தில் நின்று செல்லும்.
அதுபோலவே பெங்களுரு கண்டோன்மென்ட் முதல் பங்கார்பெட் வரை இயக்கப்பட்டு, மறுமார்க்கத்தில் பங்கார்பெட் முதல் எஸ்வந்த்பூர் வரை இயக்கப்படும் ரயில்களும் இன்று முதல் விமான நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...