அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி
அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தாக்கல் செய்த மனுவில், கடந்த 1988-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில் 2018-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நானும், திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு புகார் அளித்தோம். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

மேலும், பொதுத்துறை செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும். எனவே அவரை, முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாக கருத முடியாது .தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பில், அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com