கோவா, திரிபுரா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
கோவா, திரிபுரா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகம், மிசோர, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கர்நாடக ஆளுநராக தாவர்சந்த் கெலாட்டும், ஹரிபாபு கம்மபதி மிசோரம் மாநில ஆளுநராகவும், மங்குபாய் படேல் மத்தியப்பிரதேச மாநில ஆளுநராகவும், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இமாச்சல் பிரதேச மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ஸ்ரீதரன்பிள்ளை கோவா ஆளுநராகவும், ஹரியாணா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும், திரிபுரா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ரமேஷ் பைஸ் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், இமாச்சல் மாநில ஆளுநராக பணியாற்றி வந்த பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.