முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து வெளியிட்ட ட்வீட் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஒரு ட்விட்டை வெளியிட்டு அரசியலில் புயலை கிளப்பியுள்ளார்.
அதாவது, தனது பணியையும் தொலைநோக்கு பார்வையையும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே அங்கீகரித்துவந்துள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சீக்கியர்களின் புனித நூல் கிழிக்கப்பட்ட விவகாரம், போதைப்பொருள், விவசாயிகள் பிரச்னை, ஊழல், மின்சார தடை என பஞ்சாப் மக்கள் எதிர்கொண்ட அனைத்தையும் முன்வைத்து நான் பேசியுள்ளேன். இன்று, நான் முன்வைக்கும் 'பஞ்சாப் மாடல்' என்ன என்பதையும் மாநிலத்திற்காக யார் உண்மையாக போராடுகிறார் என்பதையும் ஆம் ஆத்மி கட்சி அறிந்து வைத்துள்ளது. என்னை எதிர்த்து கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் முன்வந்தாலும், என்னுடைய மக்களுக்கான பணிகளை அவர்களால் நிராகரிக்க முடியாது" எனவும் சித்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜகவிலிருந்து சித்து விலகியபோது ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் தன்னை புகழந்த வீடியோவை தற்போது வெளியிட்டு அவர் பரபரப்பை கிளிப்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே, சித்துவுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் மோதல் வெடித்துவருகிறது. இதனிடையே, இந்த பதிவு அவர் கட்சி மாறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.