மும்பை: மும்பையில் வெள்ளிக்கிழமை காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகம் சூழ்ந்துகொண்டுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதைகளில் வாகனஓட்டிகள் திருப்பி விடப்பட்டு வருகின்றனர்.
தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளம்போல காட்சியளிப்பதால் குர்லா - வித்யாவிஹார் ரயில் நிலையங்களுக்கு இடையே மிக மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து ரயில்களும் 20-25 நிமிடம் தாமதமாக வருகின்றன. இதனால் ரயில் பயணிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை நகரத்தில் மிதமானது முதல் லேசான மழையும், புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.