தடுப்பூசி செலுத்திய பின்னர் கரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பான்மையானோர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் மிக முக்கிய பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்திய பின்பும் கரோனா பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில், தடுப்பூசி செலுத்திய பின்னர் கரோனாவால் பாதிக்கப்படும் 86 சதவிகத்தினர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், அதில், 9.8 சதவிகத்தினருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திய பின்பு நிகழும் கரோனா இறப்பு 0.4 சதவிகிதமாக உள்ளது. தடுப்பூசி செலுத்திய பின்பு நிகழம் கரோனா பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்டது.
அதில், தடுப்பூசி செலுத்திய பின்பு மருத்துவமனை சிகிச்சை மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான ஆய்வில், "கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளது. இதை தீவிரப்படுத்துவதன் மூலமாகவே சுகாதார உள்கட்டமைப்பின் மீது விழும் சுமை குறையும்.
தற்போதைய தடுப்பூசிகள் வெளிப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து டெல்டா வகை கரோனா தப்பித்துவிடுகிறது. எனவே, இவை தீவிரமாக பரவுகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்படும் 86.09 சதவிகிதத்தினர் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வட இந்தியாவில் ஆல்ஃபா வகை கரோனாவே தீவிரமாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.