நாட்டிலேயே, கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதம் தீவிரமடைந்த நிலையில், கர்நாடகத்தில்தான் கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இங்கு 9 மருத்துவர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது குறித்து சுதாகர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கரோனா பணியில் ஈடுபட்ட 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதில் கர்நாடகத்தில் மட்டும் 9 மருத்துவர்கள்தான் பலியாகியுள்ளனர்.
கரோனா முன்களப் பணியாளர்களைக் காக்க கர்நாடக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகள் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.