பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கரோனா பரவல் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், பிகார் மாநிலத்தில் மே 15-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிகாரில் முழு ஊரடங்கிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை நெருக்கடி மேலாண்மை நிர்வாக குழு விரைவில் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.