கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேரளத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
கரோனா தடுப்பூசிகள் வீணாவதைப் பெருமளவு தடுத்து கரோனாவுக்கு எதிராக கேரள மாநிலம் சிறப்பாக செயலாற்றி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனாவுக்கு எதிரான போரில் இத்தகைய பணி மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
''கேரளத்திற்காக மத்திய அரசு அளித்த கரோனா தடுப்பு மருந்துகள் வீணாவதைப் பெருமளவு தடுத்து, அதிக எண்ணிக்கையிலானோருக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறிப்பாக செவிலியர்கள் பணி பாராட்டுக்குறியது. கேரளத்திற்கு 73,38,806 தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பியது. ஆனால் நாங்கள் 74,26,164 பேருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளோம்'' என்று முதல்வர் பினராயி விஜயன் தமது சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி கரோனாவுக்கு எதிரான போரில் கேரள மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''தடுப்பூசி வீணாவதைத் தடுப்பதில் நமது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். தடுப்பூசிகள் வீணாவதைத் தடுப்பது கரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் முக்கியமானது'' என்று பதிவிட்டுள்ளார்.