பக்கத்து வீட்டில் கரோனா என்றாலே குலை நடுங்க வீட்டை பூட்டுக் கொண்டு உள்ளே உட்கார்ந்து கொள்ளும் பலருக்கும் மத்தியில், இன்னுமும் மனிதம் மறையவில்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் தில்லி காவல்துறை துணை ஆய்வாளர் ராகேஷ்.
56 வயதாகும் ராகேஷ், தில்லி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். பிஎஸ் நிஜாமுதீன் பகுதியில் வசித்து வரும் ராகேஷுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இவர் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் லோதி சாலையில் உள்ள இடுகாட்டில் பணியாற்றி வருகிறார். இங்கு வரும் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டும் பணியில் முன்னிருந்து உதவி வருகிறார்.
இதுவரை இவர் 1,100 உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ள உதவி செய்துள்ளார். அது மட்டுமல்ல, உறவினர்கள் யாரும் இல்லாமல் வந்த 50 கரோனா நோயாளிகளின் உடல்களுக்கு இவரே இறுதிச் சடங்குகளை செய்து தகனம் செய்துள்ளார்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டும் பணியை செய்வதற்காகவே, தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தையும் அவர் ஒத்திவைத்துவிட்டார்.
இவரைப் பற்றிய விடியோவை தில்லி காவல்துறை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.