ஹரியாணா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலான கரோனா தடுப்பு மருந்துகள் வீணடிக்கப்பட்டிள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மாநில மருத்துவமனைகள் வீணடித்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கு தடுப்பு மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மருந்தை தடுப்பூசி செலுத்தும்போது வீணாகிவிடுகிறது.
அதில் ஹரியாணா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ஹரியாணாவில் அதிகபட்சமாக 6.49 சதவிகிதமும், அசாமில் 5.92 சதவிகிதமும், ராஜஸ்தானில் 5.68 சதவிகிதமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து இல்லாமல், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் அவதியடைந்து வருகிறது. இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி இல்லாமல் ஏராளமான மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேரளத்தில் அரசு ஒதுக்கிய கரோனா தடுப்பு மருந்தை கவனத்துடன் கையாண்டு, மத்திய அரசு ஒதுக்கிய நபர்களை விட கூடுதலான நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.