உருமாறிய கரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அந்த முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் உருமாறிய கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களை மிக மோசமான நிலையிலிருந்து மீட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் கண்டறியப்பட்ட 69 சுகாதாரப் பணியாளர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கண்காணித்ததன் விளைவாக இந்த தகவல் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைவருக்கும் கோவீஷில்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய மருத்துவக் குழு இயக்குநரும், குழந்தைகளுக்கான இரைப்பை குடல் நிபுணருமான அனுபம் சிபல், 69 சுகாதாரப் பணியாளர்களில் 51 பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டது. எஞ்சிய 18 பேருக்கு ஒருதவணை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் சிலர் சிறிய அளவிலான அறிகுறிகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஐசியுவில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை என்று கூறினார்.