அண்ணல் காந்தியடிகளை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மும்பை காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக மகாராஷ்டிரா காங்கிரஸ் புகார் அளிக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.
1947ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம் பிச்சை போடப்பட்டதாகவும், 2014ஆம் ஆண்டு, மோடி அரசு வந்த பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் கங்கனா தெரிவித்திருந்தார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
அதுமட்டுமின்றி, கடந்த வாரம், "நேதாஜியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க காந்தியும் மற்றவர்களும் ஒப்பு கொண்டனர்" என்னும் தலைப்பில் வெளியான பழைய செய்தியை இன்ஸ்டாகிராமிம் பகிர்ந்த கங்கனா, "நீங்கள், ஒன்று காந்தியின் ரசிகராக இருக்க வேண்டும் அல்லது நேதாஜியின் ஆதரவாளராக இருக்க வேண்டும். இரண்டுமாக இருக்க முடியாது. எது வேண்டுமோ அதை தேர்வு செய்து முடிவு எடுங்கள்" என பதவிட்டிருந்தார்.
நேதாஜி இந்தியாவிற்கு வரும் பட்சத்தில், அவரை ஒப்படைக்க ஆங்கிலேய நீதிபதியுடன் காந்தி, நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், பகத் சிங்கை தூக்கில் போட காந்தி விரும்பியதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கங்கனா குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | விமானத்தில் சக பயணிக்குசிகிச்சையளித்த மத்திய இணை
அமைச்சா்!
இதுகுறித்து மேலும் பதிவிட்ட கங்கனா, "யாராவது அறைந்தால் இன்னொரு கன்னத்தை காட்டுங்கள்" என்று சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள் தான். அப்படித்தான் சுதந்திரம் கிடைக்கும் என அவர்கள் சொன்னார்கள். ஆனால், அப்படி கிடைத்தால் அது சுதந்திரம் கிடையாது. பிச்சையை மட்டும்தான் அப்படி பெற முடியும். உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம், அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பபெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.