காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சியில் எழுந்த பூசலால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் , நிர்வாகிகள் நேற்று(நவ.17) தங்களுடைய ராஜினாமா கடித்ததை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், என கட்சியின் மூத்த நிர்வாகிகள் 20 பேர் நேற்று தங்கள் பொறுப்புகளை உதறி ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
ராஜினாமா செய்த அனைவரும் முன்னாள் முதல்வர் குலாம்நபி அசாத்தின் ஆதரவாளர்கள் என்றும் தற்போதைய மாநிலத் தலைவர் குலாம் அகமது மிர் உடன் ஏற்பட்ட கசப்புகளால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம், கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.