பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதை வழங்கினார். மேலும், பணியின் போது வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதிக்குள் வர முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தின் எஃப் 16 ரக விமானத்தை தமிழகத்தை சேர்ந்த விங் கமெண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
அப்போது இவர் சென்ற மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில், விமானத்திலிருந்து வெளியேறி பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். இதையடுத்து, இந்திய தரப்பிலிருந்தும், உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் மார்ச் 1ஆம் தேதி பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியதற்காக குரூப் கேப்டனாக பதவி உயர்வும், வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டுள்ளது.