காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் இன்று திரிணமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கம் மட்டுமின்றி திரிபுரா மற்றும் கோவா மாநிலங்களிலும் தங்களது கட்சியை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள கோவா பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிகார் முதல்வரின் மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணமூலில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சனம் செய்ததற்காக பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இவர் 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.