பஞ்சாபில் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு அவசரகால அடிப்படையில் தீர்வு காணப்படும் என ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதியளித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ளார். தேர்தலுக்கான வாக்குறுதிகளை கேஜரிவால் தேர்தல் பரப்புரைகளில் அறிவித்து வருகிறார்.
அமிருதசரஸில் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை பேசியது:
"தில்லியில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதைப்போல பஞ்சாபிலும் அரசுப் பள்ளியை மேம்படுத்துவோம். அதை எப்படி செயல்படுத்த முடியும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்ற கட்சிகளுக்குத் தெரியாது. அவசரகால அடிப்படையில் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
18 ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகும் பஞ்சாப் ஆசிரியர்கள் அதிகபட்ச ஊதியமாக ரூ. 10,000 மட்டுமே பெறுகின்றனர். தில்லியில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமே ரூ. 15,000. தற்காலிகமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்" என்றார்.