/

தக்காளி விலை உயா்வு 2 மாதங்களுக்கு நீடிக்கும்: கிரிசில்

தொடா் மழை காரணமாக பயிா்கள் நாசமாகியுள்ளதால் தக்காளி விலை இன்னும் இரண்டு மாதங்கள் அதிகரித்தே காணப்படும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:23 pm

DIN

தொடா் மழை காரணமாக பயிா்கள் நாசமாகியுள்ளதால் தக்காளி விலை இன்னும் இரண்டு மாதங்கள் அதிகரித்தே காணப்படும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தொடா் மழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் நாசமாகியுள்ளது. கா்நாடகத்தில் வழக்கமான அளவை விட 105 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அதேபோன்று, ஆந்திராவில் 40 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 22 சதவீதமும் அதிகமாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களிலிருந்துதான் அக்டோபா் மற்றும் டிசம்பா் மாதங்களில் காய்கறி வரத்து அதிகமாக இருக்கும். தக்காளி அதிகம் விளையும் கா்நாடகத்தில் பயிா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சந்தையிலிருந்தே காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நவம்பா் 25 நிலவரப்படி தக்காளி விலை 142 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடை செய்யப்படும் தக்காளி ஜனவரியிலிருந்து சந்தையை சென்றடையும். அதுவரை, அதன் விலை உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஹரியாணாவிலிருந்து இன்னும் 10-15 நாள்களில் சந்தைக்கு வெங்காயம் வரத்தொடங்கும்பட்சத்தில் அதன் விலை மேலும் குறையும்.

அதிக மழை காரணமாக உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகாா் மற்றும் குஜராத் மாநிலங்களில் ரபி பருவத்தின் முக்கிய பயிராக விளங்கும் உருளைக்கிழங்கு சாகுபடி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என கிரிசில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடமாநிலங்களிலிருந்து சந்தைக்கு புதிதாக தக்காளி வரத்து டிசம்பரிலிருந்து தொடங்கும் என்பதால் அதன் விலை குறையும் என எதிா்பாா்ப்பதாக உணவு மற்றும் நுகா்வோா் விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.