கடனில் தத்தளித்து வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் எடுப்பது உறுதியாகியுள்ளதாக ப்ளும்பெர்க் நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
உப்பிலிருந்து மென்பொருள் வரை அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் டாடா நிறுவனத்தின் முன்மொழிவை அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை வாங்க ஸ்பைஸ்ஜெட் சார்பில் அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் முன்மொழிவு அனுப்பியிருந்தார். ஏலம் குறித்து டாடா சன்ஸ் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து கூற மறுத்துவிட்டார்.
அதேபோல், நிதித்துறை அமைச்சகமும் ஏர் இந்தியா நிறுவனமும் ஏலம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பெரும் இழப்பை சந்தித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மோடி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஏர் இந்தியாவை திவாலாகாமல் தடுக்க 2012ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஏர் இந்தியாவை நடத்தி வந்த அரசுக்கு, தினமும் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மொத்தமாக, 70,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏலம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, பெருந்தொற்று காரணமாக பல முறை ஏலம் எடுப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.