வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கத்தாரின் வீட்டின் முன்பு குவிந்த விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சனிக்கிழமை காலை, அங்கு குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பியும் கொடி பிடித்தும் வருகின்றனர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த போராட்டத்தை நடத்துவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
காவல்துறையினர் அமைத்த தடுப்புகளின் மீது ஏறி நின்றபடி விவசாயிகள் கோபமாக கோஷம் எழுப்புவது போன்ற விடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு குவிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் கலைக்க முயன்றனர். அவர்களில் சிலர் தப்பிக்க தங்களின் வாகனங்களில் ஏற முயன்றனர். இதற்கு மத்தியில், கண்ணீர் புகை குண்டு ஏற்று வந்த வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன.
இதையும் படிக்க | உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; தொடர் நெருக்கடியில் மக்கள்
சந்தைகளிலும், ஆளும் பாஜக - ஜனநாயக் ஜனதா கூட்டணி எம்எல்ஏக்களின் குடியிருப்புகளுக்கு வெளியேயும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜஜ்ஜாரில் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்றபோது, அவர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்டனர்.