கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய தேசிய கொடி லே பகுதியில் ஏற்றம்

225 அடி நீளம் 150 அடி அகலத்தில் கதரால் செய்யப்பட்ட தேசிய கொடியை இந்திய ராணுவத்தின் 57ஆவது பொறியாளர் படைப்பிரிவினர் தயார் செய்துள்ளனர்
தேசிய கொடி லே பகுதியில் ஏற்றம்
தேசிய கொடி லே பகுதியில் ஏற்றம்

அண்ணல் காந்தியடிகளின் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கில் உள்ள லே பகுதியில் கதரால் செய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய தேசிய கொடி ஏற்றப்பட்டது. லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று காலை இக்கொடியை ஏற்றினார். 

225 அடி நீளம் 150 அடி அகலம் கொண்ட மூவர்ண கொடியின் எடை 1,000 கிலோவாகும்.  இந்திய ராணுவத்தின் 57ஆவது பொறியாளர்
படைப்பிரிவினர் இக்கொடியை தயாரித்துள்ளனர் என கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷன் செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளன்று, லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப்பெரிய காதி கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு பெருமை அளிக்கும் தருணம். அண்ணலை நினைவு கூறவும் இந்திய கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசத்தை கெளரவிக்கும் வகையிலும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!" என பதிவிட்டுள்ளார்.

கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட இக்கொடி லே பகுதியில் இந்திய ராணுவத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லடாக்கிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, கொடியின் தொடக்க விழாவில் மற்ற ராணுவ அலுவலர்களுடன் கலந்து கொண்டார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட விடியோவில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக லேவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மேலே பறப்பதை காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com