லக்கிம்பூர் கேரி செல்வதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக லக்னெள காவல் ஆணையர் டி.கே.தருண் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று லக்கிம்பூர் கேரி செல்லவுள்ளனர்.
ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து லக்னெள காவல் ஆணையர் கூறியது,
லக்கிம்பூர் மற்றும் சீத்தாப்பூர் செல்வதற்கு ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லக்னெள விமான நிலையத்தில் அவரை தடுத்தி நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைக்கப்படும். லக்கிம்பூர் மற்றும் சீத்தாப்பூர் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் வருகையை தடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.