லட்சத்தீவு, சண்டிகர், கோவா, ஹிமாசலப் பிரதேசம், அந்தமான் & நிகோபர் மற்றும் சிக்கிமில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் வியாழக்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் கூறுகையில், "கரோனா சவால் இன்னும் ஓயவில்லை. கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மிசோரம் மற்றும் கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. கடந்த வாரம் நாடு முழுவதிலும் ஒட்டுமொத்தமாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் முன்பைக் காட்டிலும் (5.86%) குறைந்து 1.68% ஆகப் பதிவாகியுள்ளது.
லட்சத்தீவு, சண்டிகர், கோவா, ஹிமாசலப் பிரதேசம், அந்தமான் & நிகோபர் மற்றும் சிக்கிமில் 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
28 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 5% முதல் 10% வரை உள்ளது. இது அதிக பாதிப்பு விகிதம். 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் 10-க்கும் மேல் பதிவாகி வருகிறது" என்றார் அவர்.