மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து எச்சரித்துள்ளார்.
சித்து தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் லக்கிம்பூருக்கு பேரணியாக சென்றுள்ளனர். அப்போது பேசிய அவர், "மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு நாளைக்குள் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனில், நான் உண்ணாவிரத போராடத்தில் ஈடுபடுவேன்" என்றார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அமைதியாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளி்ன் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான கார் ஏறியதில் 8 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னியும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக அறிவித்துள்ளனர்.
மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் தானோ தன்னுடைய மகனோ இல்லை என அஜய் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதேபோல், விவசாயிகள் காரின் மீது கல்வீச்சு நடத்தியதாக அஜய் மிஸ்ரா குறிப்பிட்டிருந்தார். ஆனால், சம்பவம் குறித்து நேற்று வெளியான விடியோவில் அப்படி போன்ற சம்பவம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இதையும் படிக்க | லக்கிம்பூர் வன்முறை: ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது உ.பி. அரசு
லக்கிம்பூர் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வந்தது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று லக்கிம்பூரில் விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.