ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில், ரயில் சுரங்கப் பாதைகளில் பயணிகளுக்கு முகம் சுளிக்க வைக்கும் விஷயமாக இருப்பது ரத்தச் சிவப்பு நிறத்தில் பயணிகள் துப்பிச் சென்ற எச்சில்தான்.
நமக்குத்தான் அது வெறும் அருவருப்பு. ஆனால், இந்திய ரயில்வேக்கு ஆண்டுதோறும் பல கோடி செலவு வைக்கும் மிக முக்கியப் பிரச்னையாகும்.
பான் மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பயணிகள், ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் துப்பும் இந்த எச்சில்களைக் கழுவி சுத்தம் செய்ய இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 1200 கோடி ரூபாயை செலவு செய்கிறது. அது மட்டுமல்ல, இப்பணிக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரும் வீணடிக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. கிராமத்துக்காக மலையையே துளையிட்ட இளைஞர்கள்; மகிழ்ச்சியில் கிராம மக்கள்
இந்த செலவைக் குறைக்க இந்திய ரயில்வே ஒரு உபாயம் தேடியுள்ளது. அதுதான் சின்ன சின்ன பைகள். வெறும் ரூ.5 மற்றும் 10க்கு இந்த பைகள் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கையடக்க பைகளில் சிறு மரங்களின் விதைகளும் இருக்கும். இந்தப் பையை வாங்கி வைத்துக் கொண்டு, பயணிகள் எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அந்தப் பையில் துப்பி தங்களது உடைமைகளோடு வைத்துக் கொள்ளலாம். அந்த தீ நுண்மிகளை அழிக்கும் மாக்ரோமோல்க்யூல் பல்ப் என்றும் தொழில்நுட்ப உதவியோடு இந்தப் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு வேளை இதன் பயன் முடிந்துவிட்டது என்று தூக்கி எறிந்தாலும், அது உடனடியாக மண்ணோடு மண் மக்கி, அதிலிருக்கும் விதை முளைக்கத் தொடங்கிவிடும்.
இந்த பைகளை மீண்டும் மீண்டும் 15 முதல் 20 முறை கூட பயன்படுத்தலாம். இதற்குள் எச்சிலைத் துப்பியதும் அது கெட்டியாகிவிடும். எனவே அதனை எங்கும் வைத்துக் கொள்ளலாம். கையடக்க அளவில்தான் இருக்கும். இதன் மூலம் வயதான பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். இதன் மூலம் ரயில்களும் ரயில் நிலையங்களும் மாசடைவது தவிர்க்கப்படும். இதன் மூலம் பல கோடி ரூபாய் மிச்சமாகும் என்று இந்திய ரயில்வே நம்புகிறது.