'விரைவில் வீட்டுக்கு வருவேன்..' வாக்குறுதி அளித்தவர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
'விரைவில் வீட்டுக்கு வருவேன்..' வாக்குறுதி அளித்தவர் வீரமரணம்
'விரைவில் வீட்டுக்கு வருவேன்..' வாக்குறுதி அளித்தவர் வீரமரணம்


சண்டிகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரா்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற சண்டையில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தில் வீரமரணம் அடைந்த ஜஸ்வந்த் சிங் மற்றும் கஜ்ஜன் சிங்கின் வீடுகளில் இருள்சூழ்ந்துகொண்டது.  இரண்டு பேருமே, ஒரு சில நாள்களுக்கு முன்புதான் தங்களது குடும்பத்தினருடன் பேசியுள்ளனர்.

ஜஸ்விந்தர் வரும் நவம்பர் மாதம் வீட்டுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளார். கஜ்ஜன் இன்றும் மூன்று நாள்களில் வீட்டுக்கு வருவதாக குடும்பத்தாரிடம் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணத்தைத் தழுவியுள்ளார்.

39 வயதாகும் ஜஸ்விந்தர், கபுர்தலாவைச் சேர்ந்த குடும்பத்தின் இளைய மகன். இவரது தந்தை ஹர்பஜன் சிங் இந்திய ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மற்றொரு சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றிவர்தான். கடந்த மே மாதம் தனது தந்தையின் இறப்புக்காக வீட்டுக்கு வந்தார் ஜஸ்விந்தர். வரும் நவம்பரில், இறந்தவர்களுக்கான சில சடங்குகளை செய்ய தான் விடுமுறை எடுத்துவிட்டு வருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் வீட்டுக்கு வரமாட்டார் என்றோ, அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டியது வரும் என்றோ நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கதறுகிறார்கள் குடும்பத்தினர். ஜஸ்விந்தருக்கு சுக்பிரீத் என்ற மனைவியும் 13 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர். 

27 வயதே ஆன கஜ்ஜன், ரோபர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்க கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதற்குள் இதயத்தை நொறுங்கச் செய்யும் இந்த செய்தி கிடைத்துள்ளது. அவரது தாய் உடல்நலமில்லாமல் இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் இதனைத் தெரிவிக்கவில்லை. நான்கு சகோதரர்களில் கஜ்ஜன்தான் இளையவர் என்கிறார்கள் குடும்பத்தினர்.
 
பயங்கரவாதிகளுடனான மோதல் குறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகக் கிடைத்தத் தகவலின் பேரில், சாம்ரா் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்பு படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த சண்டையில் ராணுவ இளநிலை அதிகாரி (ஜேசிஓ) உள்பட 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத வகையில், அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாா்.

2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை:

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அனந்த்நாக் மாவட்டம் ககுண்ட் பகுதியில் பாதுகாப்புப் பணியினா் தீவிர தேடுதல் பணியில் திங்கள்கிழமை ஈடுப்பட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். காவலா் ஒருவா் காயமடைந்தாா். அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றனா்.

அதுபோல, பந்திபோரா மாவட்டம் ஹாஜின் பகுதியில் குண்ட்ஜஹாங்கிா் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய்குமாா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்தியாஸ் அஹமது தாா் என்பவா் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பதும் அண்மையில் பந்திபோரா ஷாகுண்ட் பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அவருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது’ என்றாா்.

ரூ.50 லட்சம் இழப்பீடு-பஞ்சாப் அரசு அறிவிப்பு:

பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் பலியான 5 ராணுவ வீரா்களில் 3 போ் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள். அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

அமரீந்தா் சிங் கருத்து:

இந்த மோதல் சம்பவம் தொடா்பாக பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ தலிபான்கள் பிடிக்குள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினா்கள் குறிவைக்கப்படுகின்றனா். தற்போது 5 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா். நாம் பயங்கரவாதத்தை தீா்க்கமாகவும் உறுதியோடும் எதிா்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com