உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா பின் தங்கியுள்ளதாக வெளியான அறிக்கையானது அறிவியல்பூர்வமாக நடத்தப்படவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
உலக பட்டினி நாடுகள் குறியீடு அறிக்கையானது கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும், அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வறிக்கையில் மொத்தம் 116 நாடுகளில் இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 101ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிக்க | ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை அணி பேட்டிங்
கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில் 94 இடத்தில் இருந்த இந்தியாவானது தற்போது 101ஆவது இடத்திற்கு பின் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டினி மிகவும் மோசமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இந்த ஆய்வானது அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
களநிலவரம் மற்றும் புள்ளிவிவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் தவறுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட உணவுத் திட்டங்களைக் குறித்து முறையாக ஆய்வு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ஆய்வில் கேட்கப்பட்ட கருத்துக்களில் அரசு அல்லது இதர வழிகளிலிருந்து பெறப்பட்ட உணவுகள் உதவிகள் குறித்த எந்தக் கேள்விகளும் இடம்பெறாதது சந்தேகத்தை எழுப்புவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.