தில்லியில் உள்ள ஆப்கன் அகதிகள் தலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, புதிய தலிபான்களின் ஆட்சிக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக பிற நாடுகளில் வாழும் ஆப்கன் மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தில்லி ஜானக்கியாபுரம் காவல் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “தீவிரவாதமும், பாகிஸ்தானும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்”, “ஆப்கனிலிருந்து ஐஎஸ்ஐ வெளியேற வேண்டும்”, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களையும் எழுப்பினர்.
மேலும் செய்தியாளர்களிடம் ஆப்கன் அகதிகள் பேசியது:
“எனது உறவினர்கள் பஞ்ஷிரில் வசித்து வந்தனர். அவர்களை பாகிஸ்தான் விமானப்படையினர் கொன்றுவிட்டனர். அதனால்தான் இந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன்”
ஐ.எஸ்.ஐ. எங்கள் நாட்டிற்குள் ஊடுருவி உள்ளனர். ஆப்கனை கைப்பற்ற அந்த அமைப்பின் தலைவர் எங்கள் நாட்டிற்குள் சென்றுள்ளார். பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”