ஹரியாணாவில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன. இதன்காரணமாக மாணவர்கள் இணைய வழியில் தங்களது வகுப்புகளில் பங்கேற்று கல்வி கற்று வந்தனர்.
இதையும் படிக்க | இரண்டாவது நாளாக சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. ஹரியாணாவில் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 23ஆம் தேதியிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 4 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுவரும் மாணவர்கள் மட்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும், வகுப்புகளில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.